243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத கடைசியில் வெளியாகும்.

இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. கட்சி தலைமையில் ’’மெகா கூட்டணி’’ என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள அணியில். காங்கிரஸ், இடதுசாரிகள், ஆர்.எல்.எஸ்.பி. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

மெகா கூட்டணி கட்சிகளிடையே இன்னும் நான்கு தினங்களில் டெல்லியில் தொகுதி உடன்பாடு பேச்சு வார்த்தை நடைபெறும் என ஆர்.ஜே.டி. கட்சி அறிவித்துள்ளது.

ஆர்.ஜே.டி. கட்சி 150 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரியவந்துள்ளது.
‘’ எங்கள் கூட்டணியின் தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இருக்காது’’ என பீகார் மாநில காங்கிரஸ் தேர்தல் பிரச்சார தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 101 இடங்களில் நின்ற ஆர்.ஜே.டி. கட்சி 80 தொகுதிகளில் ஜெயித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி.