சிலிகான் வேலி

கொரோனா குறித்து 2015 ஆம் ஆண்டே எச்சரித்த பில் கேட்ஸ் மேலும் இரு பேரழிவுகள் உள்ளதாக தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக செல்வந்தர்களில் ஒருவரும் பிரபல தொழிலதிபரும், கொடை வள்ளலுமான பில் கேட்ஸ், தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்று குறித்து கடந்த 2015ம் ஆண்டிலேயே உலக நாடுகளை எச்சரித்தார். ஆனால் அவரின் எச்சரிக்கை சீரியஸாக எடுத்துக்கொள்ளப்படாததின் விளைவாக இன்று உலக நாடுகள் அனைத்தும்  அழிவைச் சந்தித்து வருகின்றன. எதிர்காலத்தில் நாம் சந்திக்க இருக்கும் இரண்டு பேரழிவுகள் குறித்து பில்கேட்ஸ் தற்போது பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு டெட் டாக் எனும் எபோலா வைரஸ் தாக்குதல் தொடர்பான  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ”நமக்கு அணு ஆயுதங்களை விடக் கண்ணுக்குத்தெரியாத வைரஸால் ஆபத்து காத்திருக்கிறது. உலகின் சக்திவாய்ந்த ஏவுகணைகளைக் காட்டிலும் நுண்ணிய வைரஸ்கள் ஆபத்தானவை,  இவை கோடிக்கணக்கான உயிர்களைக் குடித்துவிடும் ஆபத்து காத்திருக்கிறது,   ஆயினும் இதனை எதிர்கொள்ள நாம் தயாராக இல்லை.

நாம் இதற்காக சுகாதார படை ஒன்றைத் தயார் செய்து வைக்க வேண்டியது அவசியமாகும். மேலும் வளரும் நாடுகளில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.  இந்த எபோலா வைரஸ் காற்றில் பரவவில்லை என்பதால் தான் பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது, ஆயினும் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு முறை இந்த அதிர்ஷ்டம் நமக்குக் கிடைக்கும் எனக் கூறமுடியாது” என உலக நாடுகளை எச்சரித்தார். 2020 மார்ச் மாதம்  கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய போது பில்கேட்ஸின் இந்த வீடியோ வைரல் ஆக பரவியது குறிப்பிடத்தக்கதாகும்

சமீபத்தில் “வெண்டாசியம்” எனும் பிரபல யூடியூப் சானலின் டெரிக் முல்லர் என்பவரிடம் கலந்துரையாடிய பில்கேட்ஸ் உலகம் கொரோனா குறித்த தன்னுடைய தீர்க்கதரிசனத்தை விரும்பவில்லை என தெரிவித்தார். ”நீங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பே எப்படி கொரோனா போன்றதை கணித்தீர்கள்” என டெரிக் முல்லர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பில்கேட்ஸ், ”சுவாச வைரஸ்கள் ஒவ்வொன்றாகத் தோன்றுகின்றன.  இவை அனைத்தும் மிகவும் ஆபத்தானவை. குறிப்பாக எபோலா போன்ற தொற்றுக்காக ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போதே பிறருக்கும் பரவி விடுகிறது” என்றார்.

அப்போது டெரிக், ”மனிதர்கள் தயாராகாத வேறு பேரழிவுகள் ஏதேனும் இருக்கிறதா” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பில்கேட்ஸ்,  “இரண்டு பேரழிவுகள் இருக்கின்றன.   முதலில் பருவநிலை மாற்றம் உள்ளது   ஒவ்வொரு ஆண்டும்  கொரோனாவில் இறந்தவர்களைக் காட்டிலும் இனி பருவநிலை மாற்றத்தால் கூடுதலான உயிரிழப்புகள் ஏற்படும்.  ஆனால் அடுத்த பேரழிவைப் பற்றிப் பேசுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்

அடுத்தது பயோ தீவிரவாதம் ஆகும்:  மனித குலத்துக்குச் சேதத்தை ஏற்படுத்த விரும்பும் ஒருவரால் ஒரு வைரஸை உருவாக்க முடியும்,  தற்போது இயற்கையாக ஏற்படும் தொற்றுநோய்களைக் காட்டிலும் இந்த வைரஸ் ஏற்படுத்தும் சேதம் அதிகமாக இருக்கும்” என பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.