மதுரை: டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களுக்கு வழங்கவும், கடைக்கு வருவோரின் பார்வையில் படும்படி விலைப்பட்டியல் வைக்கவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பில் வழங்கவும், மதுபானங்களின் விலைப் பட்டியலை வைக்கக் கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழகத்தில் 5823 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாதத்திற்கு கோடிக்கணக்கில் தமிழக அரசிற்கு வருமானம் கிடைத்து வருகிறது. தமிழக அரசின் முதுகெலும்பாக மதுபானக்கடை வருமானம் உள்ளது. ஆனால் தமிழகத்திலுள்ள மதுபான கடைகளில் சட்ட விரோத மற்றும் ஒழுங்கற்ற முறையில் மதுபான விற்பனை நடந்து வருகிறது.

அதில், விற்பனையாகும் மதுபானத்திற்க்கு உரிய ரசீது வழங்கப்படு கிடையாது. ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் நிர்ணய விலையை விட 10 ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டு வரகிறது. மதுக்கடைகளில் போலி மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளில் ரசீது வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த மதுக்கடையிலும் ரசீது வழங்கப்படுவதில்லை.

இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே 2010ம் ஆண்டு முதல் தற்போது வரை மதுக்கடைகள் மூலம் பெற்ற வருமானம் பற்றிய விவரம், மது அருந்துபவர்களை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஒவ்வொரு மதுக்கடையிலும் மதுபானத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூல் செய்வதை தடுக்க வேண்டும்.

கணினி மயமாக்கப்பட்ட ரசீது வழங்கப்படவும், போலி மது விற்பனையை தடுக்க வேண்டும். இதற்கான உத்தரவு அரசுக்கு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் டாஸ்மாக் முதன்மை இயக்குநர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை சட்டத்தின்படி அனைத்து கடைகளிலும் விலைப்பட்டியல் வைக்கவும், வாங்கும் மதுபானத்திற்கு பற்றுச்சீட்டு வழங்கவும் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் முதன்மை இயக்குனர் தரப்பில் அனைத்து மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் சுற்றறிக்கை, அனுப்பி வைக்கப்பட்டது என்று கூறி, அரசு தரப்பில் அதன் பிரதி தாக்கல் செய்யப்பட்டது.

அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், குறிப்பிட்ட கால இடைவெளியில் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவது மற்றும் விலை பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.