சென்னை: அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற்றால், பெருங்குடி குப்பைமேட்டில், உயிர் சுரங்கம் எனப்படும் பயோமைனிங் செயல்பாடு, இந்தாண்டின் இறுதியிலேயே துவங்கும் என்று சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தாண்டு மே மாதமே துவங்கியிருக்க வேண்டிய இதற்கான பணிகள், கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டது. இதனால், ஏலம் உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர முடியவில்லை.

ஆனால், தற்போது நிலைமை சற்று தணிந்துள்ள நிலையில், ஏலப் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டு, பயோமைனிங் செயல்முறைக்கான நடவடிக்கைகள், இந்தாண்டு இறுதியிலேயே துவங்கிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பயோமைனிங் நடவடிக்கையின் மூலம், பள்ளிக்கரணை பகுதியில் இழக்கப்பட்ட 250 ஏக்கர்கள் நீர்நிலைப் பகுதியை மீட்டெடுக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

நச்சு நிலப்பரப்பிலிருந்து, சதுப்பு நிலப் பகுதியை மீட்க வேண்டுமென்ற செயல்திட்டம் நீண்டகாலமாக உள்ளதென்றாலும், அது இந்தாண்டின் மே மாதம் வரை நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்தாண்டின் துவக்கத்தில், ரூ.1250 கோடி மதிப்பிலான திட்ட முன்வரைவை சென்னை மாநகராட்சி மாநில அரசிடம் சமர்ப்பித்தது.