பெர்லின்

பிரிட்டனில் பரவும் புது கொரோனா வைரசுக்கு ஆறு வாரங்களில் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியும் என ஜெர்மனியைச் சேர்ந்த பயோண்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் வேகமாகப் பரவி வரும் புது வகை  கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகெங்கும் கடும் அச்சம் நிலவி உள்ளது.   பல ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பிரிட்டனுக்குச் செல்லவும் பிரிட்டனில் இருந்து வரவும் பல நாடுகள் தடை விதித்துள்ளன.  அனைத்து நாடுகளிலும் பயணிகள் மிக தீவிரமாக சோதிக்கப்படுகின்ரன்ர்.

ஜெர்மனியைச் சேர்ந்த பயோண்டெக் நிறுவனம் ஏற்கனவே பிஃபிசர் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கிப் பல நாடுகளில் அதைப் பயன்படுத்த ஒப்புதல் பெற்றுள்ளது.  இந்த நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான உகுர் சஹின்  இந்த புது கொரோனா வைரஸ் குறித்து அறிக்கை ஒன்றை வெளியி9ட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் உகுர் சஹின. “பிரிட்டனில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  அது ஒரே ஒரு வகை அல்ல. மொத்தம் ஒன்பது வகையான வைரஸ் பரவி வருகிறது. விஞ்ஞான முறைப்படி இவை அனைத்தையும் தடுக்க உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அவசியம் ஆகும்.  அதை உடனடியாக அதிகரிக்க வேண்டும்.

தற்போது இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்த சோதனைகளை நடத்தி வருகிறோம். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே உள்ள வைரஸ் குணத்துடன் ஓரளவு ஒத்துப் போகிறது.  எனவே நாங்கள் இந்த வைரசுக்குத் தடுப்பூசி தயாரிக்கும் பணியைத் தொடங்க உள்ளோம். இந்த புதிய தடுப்பூசியை ஆறே வாரங்களில் கண்டறிய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.