விஜயகாந்த்.. வியக்க வைக்கும் பக்கங்கள்..HBD

நெட்டிசன்:

பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு

மிழ்சினிமாவில் ஒரு பின்பற்றுதல் உண்டு. எவ்வளவு பெரிய ஸ்டாரானாலும் தொடர்ந்து சில படங்கள் வழுக்கினால், அம்போவென கைதட்டிவிட்டு அடுத்த நட்சத்திரத்தின் பக்கம் போய் விடுவார்கள் தயாரிப்பாளர்கள்.

ஆனால் துரதிஷ்டவசமாக தொடர் தோல்வியை கொடுத்தாலும் சிலரை மட்டும் விட்டு போகவே மாட்டார்கள். காரணம் யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பதைப்போல, வெற்றியை கொடுக்காவிட்டாலும் நஷ்டத்தை ஏற்படுத்தமாட்டார் என்ற உண்மையே அது.

இப்போதுதேமுதிக என்ற அரசியல் தலைவராக இருக்கும் நடிகர் விஜயகாந்த், என்றைக்குமே தயாரிப்பாளர்களை அழவிட்டதில்லை.பி அண்ட் சி ஏரியாக்களில் அவருடைய படங்கள் வசூலை போதிய அளவில் ஈட்டிவிடும்..

எம்ஜிஆரும் சிவாஜியும் இறுதியாய் ஆக்கிரமிருந்த 1970களில், அவர்களுக்கு பிறகு ரஜினி கமல் ராஜ்ஜியம் ஆரம்பமானது. இருவருமே தனித்தனி ராஜ்ஜியங்களை அமைக்கமுடியவில்லை.

1990களுக்கு பிறகே கமலும் ரஜினியும் வசூலில் முதல் இரு இடங்களை தீர்மானிக்க முடிந்தது. காரணம், தமிழ்சினிமாவை பொறுத்தவரை 1980கள் என்பது, ஏராளமான வசூல் சுல்தான் இருந்த கலப்படமான காலகட்டம். ரஜினி கமலை தாண்டி மோகன், கார்த்தி, ராமராஜன் சத்யராஜ், பிரபு போன்றோரும் கொடிகட்டி பறந்த நேரம் அது. இவர்களில் வெள்ளி விழாநாயகன் என பேரே எடுத்தார் படத்துக்கு படம் மைக்கை பிடித்துகொண்டு பாடிய மோகன். அப்படிப்பட்ட சூழலில் பாமர மக்களின் கலைஞனாக அவதாரம் எடுத்து விஸ்வரூபம் காட்டியவர் புரட்சிக்கலைஞர் என்று சினிமா பட்டம் பெற்ற விஜயகாந்த்.

ஆனால் சிவப்பு தோல்தான் அழகு என்று தீர்மானிக்கப்பட்ட தமிழ் சினிமாவில், கன்னங்கரேல் தோற்றதுடன் நட்சத்திர கனவோடு மதுரையில் இருந்து சென்னை வந்தபோது அவருக்கிருந்த தன்னம்பிக் கையை நினைத்துப் பார்த்தால் வியப்பாகவே இருக்கும்.

இவனெல்லாம் நடிக்க வந்துட்டான் என்று எத்தனை யோபேர் அவமானப்படுத்தி கிண்டல் செய்தாலும் அதை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாமல் திரையில் தன்னை மட்டும் நம்பி முன்னேறியவர்களில் முதன்மையானவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதற்கப்புறம் விஜயகாந்த்தான்.

கருப்பான ரஜினிக்காவது, நகரத்து வாடை, வாட்ட சாட்டமான உடல்வாகு போன்ற அம்சங்கள் இருந்தன. ஆனால் விஜயராஜ் என்ற விஜயகாந்த்திற்கோ, தன்னம்பிக்கை ஒன்றைத்தவிர எல்லாமே பின்னடைவுகள் தான்-

1979-ல் இனிக்கும் இளமை படத்தில் பெண்ணை அலங்கோலமாய் படமெடுத்து பிளாக்மெயில் செய்யும் சோட்டா வில்லனாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாக மாறி, 80களில் அவர் தொடர்ந்து வெற்றிக்கொடியை நாட்டியபோது வியக்காத ஆட்களே கிடையாது..

பெரிதும் பிரபலம் ஆகாத தூரத்து இடிமுழக்கம் படத்தில், ‘’உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’’ என்ற பாடல் விவிதபாரதியில் அவ்வளவு தெறி ஹிட்.. ரெக்கார்ட் பிளேயர்களிலும் தூள்கிளப்பும். ஆனால் படத்தில் கன்னங்கரேல் விஜயகாந்த் அந்த பாடலுக்கு தோன்றியபோது ஒரு தரப்பு வியந்தது,  இன்னொரு தரப்போ பெர்சனாலிட்டியை வைத்து கிண்டலடித்தது.

ஆனால் விஜயகாந்த் என்ற கருப்பு மனிதன் எதற்கும் கலங்கவில்லை. காலம் அந்த வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பனை கைவிடவில்லை.

சட்டம் ஒரு இருட்டறை என 1981ல் ஒரு படம் வந்தது. பெற்றோரை பக்கா பிளானோடு கொலை செய்தவர்களை, பதிலுக்கு பக்கா பிளான்களை தீட்டி வில்லன்கள் ஒவ்வொருத்தராய் போட்டுத் தள்ளுகிற விறுவிறுப் பான படம். அட்டகாசமாய் செய்து முடித்தார் விஜயகாந்த். ஹீரோ திரையில் வரும்போதெல்லாம் தியேட்டரில் கிளாப்ஸ் பறக்கிற ரகமான படம் அது.

அந்தப்படம் எந்த அளவுக்கு ஹிட் என்றால் அமிதாப், ஹேமாமாலினி ரஜினி போன்ற டாப் ஸ்டார்களை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்கிற அளவுக்கு ஹிட்டோ ஹிட்..

அதன்பிறகு சாட்சி போன்ற படங்களால் அடித்தட்டு மக்களை ஆக்சன் காட்சிகள் மூலம் தன் வசப்ப டுத்திய விஜயகாந்த், கடுமையாக போராடி முன்னணி நடிகர்களுக்கு இணையாக 80-களின் மத்தி யில் மாஸ் கமர்சியல் ஹீரோ என்ற அந்தஸ்த்தை பிடித்தவர்.

சாமான்யனாய் நடித்து வெற்றிகரமாய் ஜொலித்த னால்தான் முன்னணி கதாநாயகனாக ஒரே ஆண்டில் 18 படங்களை வெளிவரச்செய்து சாதனை படைக்கும் அளவுக்கு இருந்தது அவரது திரைப் பயண வேகம்.

வைதேகி காத்திருந்தாள், அம்மன்கோவில் கிழக் காலே, கேப்டன் பிரபாகன், வானத்தைபோல போன்ற படங்களின் பிரமாண்டமான வெற்றியின் முன்,, இன் றைய காலத்தில் வர்த்தகத்திற்காக கட்டமைப்பட்ட விளம்பர பின்னணி கொண்ட வெற்றிகள் நெருங்க முடியுமா என்பது சந்தேகமே.

சினிமா உலகில் மற்ற இரண்டாம் கலைஞர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதில் தனி அக்கறை காட்டியவர். அற்புதமான திறமைகள் இருந் தும் கைகொடுத்து ஆதரிக்க ஆள் இல்லாமல் தத்த ளித்த நவீன சிந்தனைகொண்ட இளைஞர்களுக்கு, ஊமைவிழிகள் படத்தின் மூலம் பெருங்கதவை திறந்துவிட்ட நல்ல மனதுக்காரர்.

அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, வாய்ப்பு வழங்கப் பட்டு பின்னாளில் புகழின் உச்சியை எட்டிய நடிகர், நடிகை, நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் மிகப்பெரியது.

இன்னோரு ஆச்சர்யமான விஷயம், பல முன்னணி நடிகைகள் முதன் முதலாய் சொந்தப்படம் எடுக்கும்போது நாடியது விஜயகாந்தைதான். வடநாட்டிலிருந்து நீண்டநாளைக்கு பிறகு திடீரென தமிழக சினிமா நடிகை ஜெயப்பிரதா கண்வைத்தபோது, விஜயகாந்தைத்தான் தேர்ந்தெடுத்தார் ஏழை ஜாதி படத்துக்காக, அவர் நினைத்தபடியே வெற்றியும் கண்டார்.

ஆண்டாண்டு காலமாய் கடனில் தத்தளித்த தென்னிந்தியநடிகர் சங்கத்தை அதனிலிருந்து மீட்டது விஜயகாந்தின் செயல் திறனுக்கு என்றைக்கும் ஒரு அழிக்கமுடியாத சாட்சி,

மற்றவர்களின் பசியாற்றுவதில் அவருக்கிருந்த தாயுள்ளத்தை 80களிலேயே அவரை கூர்ந்து கவனித்தவர்களுக்கு நன்கு தெரியும். கல்விக்காக ஏங்கியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளி கள் ஆகியோருக்கு உதவுவதற்காக அவர் 30ஆண்டுகளுக்கு முன்பே அவர் நீட்டிய கரங்கள், வியக்கத்தக்கவை. அப்போதெல்லாம் அவர் அரசியலுக்கு வரவில்லை என்பது நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று

அரசியல் கட்சியை ஆரம்பித்து தோற்றுப்போன ஏராளமான தமிழக நட்சத்திரங்கள் மத்தியில், எம்ஜிஆருக்கு பிறகு வெற்றிகண்ட ஒரே நட்சத்திரமும் விஜயகாந்த் தான்.

ஒரு கட்சியை தொடங்கி, கலைஞர், ஜெயலலிதா அவர்கள் என்ற இருபெரும் ஆளுமைகளுக்கு இடையே நடைபோட்ட விதம் அலாதியானது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முக்கிய பொறுப்புவரை விஜயகாந்த் எட்டிய வேகம்,தமிழக அரசியலில் ஒரு விறுப்பான வரலாறு.

2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார் விஜயகாந்த். தமிழகத்தில் பாஜக தோல்வி, ஆனால் மத்தியில் வெற்றி. மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

அப்போது விஜயகாந்த டெல்லிக்கு போய் மோடியை பார்க்கிறார். மோடி ஓடிவந்து விஜயகாந்தை வாஞ்சையோடு கட்டிப்பிடிப்பார் பாருங்கள். வெற்றியோ தோல்வியோ தன்னை நம்பினால் விஜயகாந்த் எப்படி உழைப்பார் என்பதை மோடி புரிந்துகொண்டு நன்றி செலுத்தியவிதம் இன்றள வும் மறக்கமுடியாதது

கம்பீர குரல் வளத்தால் சினிமாவிலும் அரசியல் மேடைகளிலும் வலம் வந்த அவருக்கு காலம் செய்த கோலம் உடல் நலம் விஷயத்தில் வேறுமாதிரியாக விளையாடிவிட்டது..

விரைவில், பூரண நலம் பெற்று பழைய பன்னீர் செல்வமாய்.. விஜயகாந்தாய் வரவேண்டும்..

அபரிதமான அன்புகொண்டவர்களால் கேப்டன் என்றழைக்கப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு 68 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..