ராய்ப்பூர்: உங்களின் ஒரு வாக்குதான், சர்ஜிக்கல் மற்றும் விமானத் தாக்குதல்களை நடத்தவும், செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தவும் காரணமாக இருந்தது என்று மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் நரேந்திர மோடி.

ராணுவ சாகசங்களையும், செயல்பாடுகளையும் தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று எவ்வளவோ வலியுறுத்தப்பட்டும், பாரதீய ஜனதாவின் நரேந்திர மோடி தொடங்கி, சாதாரண சட்டமன்ற உறுப்பினர் வரை, அந்த மோசமான செயலை திரும்ப திரும்ப செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

மராட்டிய மாநிலம் லத்தூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “முதல்முறையாக வாக்களிக்கவிருக்கும் தலைமுறையினர், தங்களின் வாக்கை, பாலகோட் விமானத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும்” என மோடி பேசிய பேச்சு குறித்து தேர்தல் கமிஷன் கடந்த வாரம் விளக்கம் கேட்டிருந்தது.

அந்த நிலையில்தான், தற்போது மீண்டும் இப்படி பேசியுள்ளார் நரேந்திர மோடி.

மேலும், “மோடி என்ற வார்த்தையை தங்களுடைய பெயர்களின் பின்னால் கொண்ட பலரும், திருடர்களாகவே (நரேந்திர மோடி, லலித் மோடி மற்றும் நீரவ் மோடி) இருக்கிறார்கள்” என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு பதிலளித்த மோடி, “அவர்கள் சுல்தான் மனப்பான்மையோடு, பாதிக்கப்பட்ட மக்களை குற்றம்சாட்டுவதோடு, அவர்களை அடிமைகளாகவும் நடத்துகிறார்கள்” என்றார்.

– மதுரை மாயாண்டி