டில்லி
பார்லிமெண்ட் முடக்கப்பட்டதை எதிர்த்து மோடி தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உண்ணாவிரதப் போராட்டம் தற்போது சகஜமாகி வருகிறது. தமிழக ஆளும் கட்சியான அதிமுக சமீபத்தில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் உணவு இடைவெளி விட்டதாகவும் அந்த சமயத்தில் பலர் உணவு அருந்தியதாகவும் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகின, அதே போல் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் தொடங்கும் சில நிமிடங்கள் முன்பு பலத்த சிற்றுண்டி உட்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகின.
தற்போதைய பாராளுமன்ற தொடர் நடந்த போது காங்கிரஸ் அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல கட்சிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன. இதனால் பாராளுமன்றத் தொடர் முழுவதுமாக முடங்கியது. பாஜக தாக்கல் செய்ய உத்தேசித்திருந்த பல மசோதாக்கள் தாக்கல் செய்ய முடியவில்லை. மேலும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த மசோதாக்கள் மீதும் எந்த ஒரு விவாதமும் நிகழவில்லை;
தற்போது பாராளுமன்றத் தொடரை முழுவதுமாக முடக்கிய எதிர்க்கட்சியனருக்கு தஙகள் எதிர்ப்பை காட்ட வரும் 12ஆம் தேதி அன்று பாஜக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் அனைத்து பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொள்வார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் நிகழ்ந்த பல நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு பாஜக பல கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளது.
பாஜக தொண்டர்கள் யாரும் பொது இடங்களில் உணவு உண்பதையும் அதை புகைப்படம் எடுக்கப்படுவதையும் தவிர்க்க வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் உண்ணாவிரதம் நடை பெறும் இடங்களில் எந்த உணவுக் கடைகளும் இருக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உணவுக் கடைகள் அமைப்பதினால் கட்சியினருக்கு தேவையற்ற கெட்ட பெயர் ஏற்படும் எனவும் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிய வந்துள்ளது