இடாநகர்:
அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் அருணாச்சல மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் பா.ஜ.வில் இணைந்ததை தொடர்ந்து அக்கட்சி ஆட்சியை பிடித்தது.
அருணாச்சல பிரதேசத்தில் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 60 ஆகும். அருணாச்சல மக்கள் கட்சி சார்பில் முதல் அமைச்சராக பேமா காண்டு உள்ளார். இந்த கட்சிக்கு மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்நிலையில் பேமா காண்டு மற்றும் எம்எல்.ஏக்கள் சிலர் பா.ஜ.வுக்கு சாதகமாக நடந்து கொள்வதாகவும், கட்சியை இணைக்க முயன்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இதனையடுத்து பேமா காண்டு உட்பட 33 எம்.எல்.ஏ.க்கள் பாஜ., கட்சியில் இணைந்தனர்.
இதனால் மாநிலத்தில் பா.ஜ.வின் பலம் 47 ஆனது. அதே நேரத்தில் ஆளும் அருணாச்சல மக்கள் கட்சியின் பலம் 10 ஆக குறைந்தது.
தொடர்ந்து பா.ஜ. சபாநாயகரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரியது. ஆதரவு எம்.எல்.ஏக்களை சபாநாயகர் முன் நிறுத்தியது. இதனை ஏற்ற சபாநாயகர் ஆட்சி அமைக்க பா.ஜ.வுக்கு அழைப்பு விடுத்தார்.
தற்போதைய நிலவரப்படி பா.ஜ. 47 எம்.எல்.ஏக்களும், அருணாச்சல் மக்கள் கட்சிக்கு 10, காங்கிரசுக்கு 3 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.