அகமதாபாத்: நரேந்திர மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர்களில் ஒருவராக கூறப்படும் அதானியின் மின்சார உற்பத்தி நிறுவனத்தை திவாலாகும் நிலையிலிருந்து, பாரதீய ஜனதா அரசுகள் காப்பாற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

அதானி பவர் லிமிடெட் என்ற பெயர்கொண்ட அந்த நிறுவனம், ஒரு அனல் மின்னுற்பத்தி நிலையமாகும். அந்த நிறுவனத்தை, பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தைவிட, அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்குமாறு கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத்தின் பாரதீய ஜனதா அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவானது, 2017ம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் அரசின் இந்த உத்தரவு, அம்மாநில சாமான்ய மக்களின் தலையில் பெரிய சுமையை ஏற்றியது. அதாவது, அதானி நிறுவனத்தைக் காப்பாற்றும் அரசின் முயற்சியில், சாதாரண மக்கள் பலிகடாவானார்கள்.

அந்த காலகட்டத்தில் மட்டும், நாடு முழுவதும் 2500 நிறுவனங்கள் திவாலாகி, அதன் சொத்துக்கள் வங்கிகளால் ஏலம் விடப்பட, அதானியின் நிறுவனம் மட்டும், மாநிலத்திலும், மத்தியிலும் இருக்கும் பாரதீய ஜனதா அரசுகளால் தப்பிப் பிழைத்தது என்று அந்தச் செய்தி கூறுகிறது.

– மதுரை மாயாண்டி