சென்னை

பாஜகவினர் படேல் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடுமையாக தாக்கி உள்ளார்

நேற்று தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தி9ய முர்தி பவனில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 35 ஆம் நினைவு நாள் மற்றும் சர்தார் வல்லபபாய் படேலின் 144 ஆம் பிறந்த நாள் விழா நடந்தது.    அப்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்திரா காந்தி மற்றும் படேலின் படங்களுக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அப்போது செய்தியாளர்களிடம் கே எஸ் அழகிரி, “நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்கும் பாஜகவுக்கும் எவ்விதத்  தொடர்பும் இல்லை. அந்தக் கட்சியில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் யாரும் இல்லாததால் வல்லபபாய் படேல் போன்ற காங்கிரஸ் தலைவர்களைப் பயன்படுத்தி பாஜகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

மத்திய பாஜக அரசு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைத் திட்டமிட்டுப் பழிவாங்கி வருகிறது.ஆனால் ப சிதம்பரம் எதற்கும் அஞ்சாமல் மன வலிமையுடன் எதிர்கொண்டு வருகிறார். அதே நேரத்தில்  அவரது உடல் மிகவும் நலிவடைந்து வருகிறது.

தமிழகத்தில் நடந்து வரும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தை அதிமுக அரசு மிரட்டி வருகிறது.  இது சரியானது இல்லை.   மருத்துவர்களிடம் பேச்சு நடத்தி போராட்டத்தை அரசு இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.