மால்டா, மேற்கு வங்கம்

டில்லியில் நடந்த வன்முறையை மறைக்க கொரோனா வைரஸ் குறித்த பீதியை மத்திய அரசு கிளப்புவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகிறது.   இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது.  மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று செய்தியாளர்களிடம் இந்தியாவில் தற்போது 28 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்..

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் நேற்று ஒரு பேரணி  நடந்தது.  அதில் கலந்துக் கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “டில்லியில் நடந்த வன்முறை சம்பவத்தில் இருந்து மக்களைத் திசை திருப்பவே கொரோனா வைரஸ் குறித்த பீதியை பாஜக அரசு கிளப்பி உள்ளது.   ஒரு சிலர் கொரோனா கொரோனா எனக் கத்துகின்றனர்.   இது பயங்கரமான நோய் தான்.  ஆயினும் இத்தகைய ஒரு பீதியைக் கிளப்ப வேண்டாம்/

டில்லி வன்முறையில் இதுவரை எத்தனை பேர் உயிர் இழந்தனர் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.   நாட்டின் உண்மையான கொரோனா தாக்குதலான டில்லி வன்முறையை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காக பாஜகவினர் தொலைக்காட்சி சேனல்களை பயன்படுத்துகின்றனர்.  அவர்கள் கொரோனா வைரஸ் குறித்து ஒரு மிகப்படுத்தலை தொலைக்காட்சி சேனல்கள் மூலம் உருவாக்கி வருகின்றனர்.

இந்த வன்முறையில் பலர் வீடு இழந்துள்ளனர்  நூற்றுக்கும் மேற்பட்டோர் காணவில்லை. சாக்கடைகளில் இருந்து உடல்கள் மீட்கப்படுகின்றன.  மேற்கு வங்கத்தில் யாரையாவது எலி கடித்தால் கூட சிபிஐ விசாரணை கோரும் பாஜகவினர் டில்லி வன்முறை குறித்து ஒரு நீதி விசாரணை கூட அமைக்கவில்லை.    இந்த வன்முறை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும். ’ என உரையாற்றினார்..