இம்பால் :

பாஜக கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இணைந்த அதேவேளையில் மேலும் 6 எம்.எல்.ஏக்கள் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இதனால், மணிப்பூரில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பலம் 30 ஆக குறைந்துள்ளது.

60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டமன்றத்தில் தற்போது 59 எம்எல்ஏக்கள் உள்ளனர். மூன்று எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து காங்கிரசின் பலம் 24 ஆக உயர்ந்துள்ளது, முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் காங்கிரசுக்கு 27 பேரின் ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் கட்சியின் 4 உறுப்பினர்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரு உறுப்பினர் மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ உள்ளிட்ட 6 பேர் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால், இங்கு பாஜக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் நிலையில் உள்ளது.