புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கர்நாடகாவில் அதிகளவிலான பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரசில் வந்து இணைவார்கள் என்று தெரிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்.

அவர் கூறியதாவது, “மக்கள் தற்போது மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். எனவே, மே 23ம் தேதிக்குப் பின்னர், காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைவது உறுதி.

கர்நாடகாவில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு விரைவில் கவிழ்ந்துவிடும் என்பதில் உண்மையில்லை. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர், கர்நாடக பாரதீய ஜனதாவைச் சேர்ந்த அதிகளவிலான சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரசில் வந்து சேரவுள்ளார்கள்.

நாங்கள் எந்த எதிர்க்கட்சி உறுப்பினரையும் பேரம் பேசவில்லை. அவர்களாகவே, சுய விருப்பத்தின் பேரில் வந்து இணையவுள்ளார்கள்” என்று தெரிவித்தார்.