உயிருடன் இருக்கும் நடிகைக்கு இரங்கல் தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ.
தொண்டர்களுக்காக பெண்களை கடத்துவேன் என பேசிய பாஜக எம்.எல்.ஏ. மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் இந்தி நடிகை இறந்து விட்டதாகவும், அவருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் பதிவை போட்டு விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளார் எம்.எல்.ஏ.ராம் கதம்.
இருதினங்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ராம் கதம் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்று பேசினா. அப்போது இளைஞர்களின் காதலை மறுக்கும் பெண்களை கடத்தி வந்து அவர்களிடம் ஒப்படைப்பேன் என கூறினார். இது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியதுடன், அவர் மீது மகளிர் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் நேற்று உயிருடன் இருக்கும் நடிகைக்கு இரங்கல் தெரிவித்து மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் ராம் கதம். ” காதலர் தினம் “ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஹிந்தி நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வருகிறார். ராம் கதம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “ ஹிந்தி மற்றும் மராத்தியில் புகழ்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் “ என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆதாரமற்ற தகவல்களை வைத்து இரங்கல் செய்தி வெளியிட்ட அவரை சமூக வலைதளத்தில் பலரும் கிண்டலடித்தனர். சிலர் கண்டனமும் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக அவர் தன் பதிவை திரும்பப் பெற்றுக் கொண்டார். மேலும் “நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து கடந்த 2 நாட்களாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவரின் நல்ல உடல்நிலைக்காகவும், வேகமாக குணமடையவும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என மற்றொரு பதிவைவும் ராம் கதம் வெளியிட்டுள்ளார்.