’’அனுமன் புகழ் பாடினால் கொரோனா ஒழியும்’’ என்கிறார் பா.ஜ.க.பெண் எம்.பி..

டாக்டர்களையும், விஞ்ஞானிகளையும் முந்திக்கொண்டு நம் ஊர் அரசியல் வாதிகள், கொரோனாவுக்கு புதிய மருந்துகளை ‘’கண்டுபிடித்து’’

மக்களுக்கு இலவசமாக ‘ பிருஷ்கிருப்ஷன் ‘’ செய்த வண்ணம் உள்ளனர்.

பா.ஜ.க.வை சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் எம்.பி.யான பிரக்யா தாகூர், தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா ஒழிப்புக்கு பரிந்துரை செய்துள்ள மருந்து இது:

‘’ 25 ஆம் தேதி முதல் ( சனிக்கிழமை) ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வரை, நாம் அனைவரும்  வீட்டில் இருந்த படி தினமும் 5 முறை அனுமன் திருப்புகழ் பாடினால் கொரோனாவில் இருந்து விடுபடலாம்.

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடக்கும் 5 ஆம் தேதி அனுமன் புகழ்மாலை இசைத்து முடித்ததும் , நமது வீட்டில் விளக்கு ஏற்றி ராமர் படத்துக்கு ஆரத்தி எடுத்து வழி படவேண்டும். இது நமக்கு தீபாவளி பண்டிகையாக இருக்கும். அனுமன் பாடல் பாடினால் நிச்சயம் உலகில் இருந்து கொரோனா ஒழிந்து போகும்’’

இவ்வாறு ட்வீட் செய்துள்ள பெண் எம்.பி.’’ 25-ஆம்  தேதி முதல் ஆகஸ்ட் 4 .ஆம் தேதி வரை போபாலில் ஊரடங்கை அமல் படுத்த மத்தியபிரதேச அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றும்  வலியுறுத்தியுள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.பி. பிரக்யா, கடந்த மக்களவை தேர்தலில் போபால் தொகுதியில்  முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங்கை  தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 -பா.பாரதி