குண்டு வைத்துக் கொல்லப்போவதாக பா.ஜ.க. எம்.பி.க்கு பாகிஸ்தானில் இருந்து டெலிபோன் மிரட்டல்..

உத்தரபிரதேச மாநிலம் உன்னவோ மக்களவை தொகுதி பா.ஜ.க. எம்.பி.யாக இருப்பவர், சாக்‌ஷி மகராஜ். சாமியாரும் ஆவார்.

ராமஜென்மபூமி போராட்டத்தில் பங்கு கொண்ட இவருக்குப் பாகிஸ்தானில் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.

இது குறித்து சாக்‌ஷி மகராஜ், அங்குள்ள சதார் கோட்வாலி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:

‘’பாகிஸ்தான் தொலைப்பேசி நம்பரில் இருந்து எனக்கு இரு முறை கொலை மிரட்டல் வந்தது. போனில் பேசிய நபர் என்னையும், பிரதமர் மோடியையும் அவதூறாகத்  திட்டினான்.

‘’நானும், சில முஜாகிதீன்களும் உன்னை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். உன் வீட்டோடு உன்னைக் குண்டு வைத்துக் கொல்வோம்’’ என்று மிரட்டினான்.

எனது உயிரையும் , சொத்துக்களையும்  காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுங்கள்’’ என  சாக்‌ஷி மகராஜ் எம்.பி.அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதிகள் மிரட்டல் உள்ளதால் அவருக்கு ஏற்கனவே ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது..

மிரட்டல் காரணமாக அவருக்கான பாதுகாப்பைப் பலப்படுத்துவது குறித்துக் காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

-பா.பாரதி.