நியூஸ்பாண்ட்:

“பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானமான அரசர் பற்றி மேலும் சில செய்திகள் சொல்வதாக சொன்னீரே” என்று கொஞ்சம் கோபமாகவே நியூஸ்பாண்டுக்கு வாட்ஸ் அப் செய்தி அனுப்பினோம்.

அடுத்த விநாடியே, “நினைவிருக்கிறது. அவசியம் சொல்வேன். அதற்குள் வேறு பல முக்கிய வேலைகள். தமிழக அரசு கலைக்கப்படும் என்று ஒரு பேச்சு உலவுகிறது. ” என்று பதில் வந்தது.

“ஏன்.. டில்லி மேலிடம் விரும்பியபடித்தானே தமிழக அரசு நடக்கிறது” என்று பதில் தட்டினோம்.

“அவர்கள் கண்ணசைவுக்கு ஏற்பத்தான் ஆட்சி நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்த விசயம்தான். மரபை மீறி,  கவர்னரே களத்தில் இறங்கி ஆய்வு செய்தபோதுகூட, அமைச்சர் பெருமக்கள் எதிர்க்கவில்லையே.. வரவேற்கத்தானே செய்தார்கள்! தவிர, முதல்வர் எடப்பாடியும், “கவர்னர் நடத்தியது ஆய்வு அல்ல.. அவர் ஏதும் உத்தரவிடவில்லையே” என்று சப்பைக்கட்டு கட்டினார்.

“அது தெரிந்த விசயம்தானே.. பிறகு ஏன் கலைக்க நினைக்கிறார்கள் என்றுதான் கேட்கிறோம்..”

“இதே கேள்வியைத்தான் டில்லி பிரமுகர்கள் சிலரிடம் கேட்டேன். அவர்கள்.. கிட்டதட்ட சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டோம். அந்தக்குடும்பத்தினர் சிலர் இப்போது ஆவேசமாக பேசிவருகிறார்களே தவிர.. அவர்களுக்கு எதிர்காலம் கிடையாது.  சமீபத்திய ரெய்டு காரணமாக, மக்களிடையே அவர்கள் மீது வெறுப்பு கூடியிருக்கிறது. இத்தனை சொத்துக்களை அடித்துப் பிடித்து வாங்கிப்போட்டிருக்கிறார்களே.. என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்..

அதே நேரம், சசிகலா குடும்பம் மட்டும்தான் சம்பாதித்த்தா.. இப்போது அவரை எதிர்க்கும் ஈபிஎஸ்.. ஓபிஎஸ் அணிகள் சம்பாதிக்கவில்லையா… அந்தக் குடும்பத்தினருக்கு இந்த அணியினர்தானே தண்டல் வசூலித்துக்கொடுத்தார்கள் என்றும் மக்கள் கேட்கிறார்கள்.

இதை உணர்ந்துதான், இந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு, ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். உள்ளிட்ட 23 அமைச்சர்கள் பெருமக்களையும்  ரெய்டுக்குள் சிக்கவைக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டிருக்கிறது என்றும் இவர்கள் மீது ஊழல் வழக்கு பதியப்படும் என்றும் சொல்கிறார்கள்!”

 “அட… அப்படியா..”

“ஆமாம்..எடப்பாடி அரசு வரும் 22 அல்லது 23ஆம் தேதி டிஸ்மிஸ் செய்யப்படும் என்று தேதிகூட சொல்கிறார்கள்.  ஆளுநரின் ஆலோசகராக ஓ. ராஜகோபால், சோமநாதன் ஆகியோர் இருப்பார்கள் என்றும் சொல்கிறார்கள்..!”

“இம்புட்டு திட்டம் இருக்கா..” 

“ஆம்… இதன் மூலம், மத்திய பாஜக அரசு பாரபட்சமின்றி செயல்படுகிறது என்கிற எண்ணம் மக்களிடம் ஏற்படும். ஒட்டுமொத்த அதிமுகவும் ஆட்டம் காணும் என்று நினைக்கிறார்களாம்.. சரி.. நன்றி வணக்கம். மீண்டும் சந்திப்போம்!”