குவஹாத்தி: அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனவால் குறித்து சமூகவலைதளத்தில் மோசமாக எழுதிய குற்றத்திற்காக பாரதீய ஜனதா கட்சியின் சமூக வலைதளப் பிரிவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அக்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், அஸ்ஸாம் மாநிலத்தை ஆட்சி செய்வது பாரதீய ஜனதாக் கட்சிதான். நிதுமோனி போரா மற்றும் நானி கோபால் டுட்டா ஆகியோர்தான் கைதுசெய்யப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் ஹேமந்தா பருவா என்பவரின் வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

போரா என்பவர் மத்திய அஸ்ஸாமின் மோரிகவோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர். டுட்டாவும் பருவாவும், மஜுலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மஜுலி தொகுதியில் வென்றவர்தான் இன்றைய அஸ்ஸாம் முதலமைச்சர்.

முதலமைச்சர் குறித்த அவதூறுக்காக, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ராஜு மஹந்தா என்பவர் புகார் செய்திருந்தார். இந்த கைது சம்பவத்தையடுத்து, பாரதீய ஜனதாவின் சமூகவலைதளப் பிரிவு, உள்கட்சி ஜனநாயகம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளது.