புதுடெல்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜிவ் தியாகி மாரடைப்பால் திடீரென்று மரணமடைந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரை மோசமான வார்த்தையால் விமர்சனம் செய்த பா.ஜ. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா மீது கடும் கண்டனக் கணைகள் பாய்ந்துள்ளன.

பெங்களூரு கலவரம் தொடர்பாக ஆஜ் தக் தொலைக்காட்சி சேனலில் விவாதம் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் தியாகி மற்றும் பா.ஜ. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, இருவருக்கும் இடையில் நடைபெற்ற காரசாரமான விவாதத்தில், ‘துரோகி’ என்ற அர்த்தத்தை குறிக்கும் ஜெய்சந்த் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறிதுநேரத்தில், மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் ராஜிவ் தியாகி.

இந்நிலையில், தியாகியின் ஆதரவாளர்கள் உட்பட, நடுநிலையாளர்கள் பலரும், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வன்மம் கக்கிய சம்பித் பத்ராவை கடுமையாக விளாசி வருகின்றனர்.