தமிழக பா.ஜ.க.பொறுப்பாளர் மாற்றப்படுகிறார்…

பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், அந்த கட்சியின் தமிழக .பொறுப்பாளராகக் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க இவர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் முரளிதர ராவ், ஆலோசனையைக் கேட்டு பா.ஜ.க.தனித்துப் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை.

தமிழகத்தில் இன்னும் 8 மாதங்களில்  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முரளிதர ராவை மாற்ற பா.ஜ.க.மேலிடம் முடிவு செய்துள்ளது.

கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் அல்லது தேசிய செயலாளர் சுனில் வி.தியோதார், ஆகிய இருவரில் ஒருவர் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட இருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அநேகமாக ராம் மாதவ், நியமிக்கப்படும் வாய்ப்புகளே அதிகம்.

ஏன்?

‘’ராம் மாதவ், தமிழக அரசியலை நன்கு அறிந்தவர். வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வெற்றிக்கு வழி வகுத்தவர் இவர்.

ராம் மாதவ், தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டால், வலுவான கூட்டணியை உருவாக்கி, கணிசமான எண்ணிக்கையில்  பா.ஜ.க.வுக்கு ’சீட்’.களை பெற்றுத் தருவார்’’ என்று கட்சி வட்டாரங்கள் மேலும் கூறின.

-பா.பாரதி.