போபால்

த்தியப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த 22 பேருக்கு இடைத் தேர்தலில் போட்டியிட பாஜக முன்னுரிமை வழங்க உள்ளது.

முன்பு மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது கமல்நாத் முதல்வராகப் பதவி வகித்தார். அப்போது கமல்நாத்துக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய சிந்தியா பாஜகவில் இணைந்தார். அதற்கு முன்பு,  அவரது ஆதரவாளர்களான 22 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து அவர்களும் பாஜகவில் இணைந்தனர்.

இதனால் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த மார்ச் 23-ம் தேதி மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.  சட்டப்பேரவை உறுப்பின்ர்க்ள் பதவி விலகியதால் காலியான 22 சட்டப்பேரவைத் தொகுதிகளும் மற்றும் காங்கிரஸ், பாஜக கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர் மறைவால் 2 தொகுதிகளும் காலியாக உள்ளன.

காலியாக உள்ள 24சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் செப்டம்பர் மாதத்தில் .இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேச பாஜக தலைவர் வி.டி.சர்மா இது குறித்து, “சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த 22 பேர் மிகப்பெரிய தியாகத்தைச் செய்துள்ளனர்.  ஒரு சிலர் அமைச்சர் பதவியில் இருந்தும் விலகியுள்ளனர். ஆகவே வரும் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அவர்கள் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறோம். தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களை அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவிக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.