புதுடெல்லி: இந்திய தலைநகரிலுள்ள 7 மக்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 16ம் தேதி துவங்கவுள்ள நிலையில், அங்கே எந்தப் பிரதானக் கட்சியும் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், டெல்லியின் அனைத்துத் தொகுதிகளையும் பாரதீய ஜனதா கைப்பற்றியது. ஆனால், அக்கட்சி இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

ஆம் ஆத்மி – காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து தீவிரப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

எனவே, அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுக்காக பாரதீய ஜனதா காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி உறுதியாகிவிட்டால், பாரதீய ஜனதா வேட்பாளர் பட்டியலில் சில மாற்றங்கள் வரலாம் என்றும், கூட்டணியில்லாமல் 3 பிரதானக் கட்சிகளும் தனியாகவே களமிறங்கும் நிலை வந்தால், கடந்த தேர்தலில் வென்ற அந்த 7 பேரையும், அப்படியே இந்தமுறையும் பாரதீய ஜனதா கட்சி களமிறக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

– மதுரை மாயாண்டி