டில்லி:

லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி வீடுகளுக்கு சென்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி  ஆசி பெற்றனர்.

பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோர் ஜோஷியிடம் ஆசிபெற்ற மோடி

நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் 352 இடங் களில் வெற்றி பெற்றுள்ளன. இதில்  303 தொகுதிகளில் பாஜக தனித்து வெற்றி பெற்றுள்ளதால் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

இதையடுத்து,  இரண்டாவது முறையாக மோடி, பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர்,  பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும்  முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் வீடுகளுக்கு  சென்று அவர்களிடம் ஆசி பெற்றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  ‘இவர்களைப் போன்ற மிக உயர்ந்த தலைவர்கள் கட்டமைக்கவும் புதிய சித்தாந்தங்களின் மூலம் மக்களை ஈர்க்கவும் முன்னர் ஆற்றிய அரும்பணிகளால்தான் இன்று பாஜகவின் இந்த வெற்றி சாத்தியமானது’ என்று  தெரிவித்து உள்ளார்.