சென்னை :

சீன நிறுவனங்களுடன் கைகோர்த்து தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதை தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. சமர்ப்பித்த செலவின கணக்குகளின் ஆதாரத்தோடு குற்றம் சாட்டியிருக்கிறார் சமூக வலைதள மற்றும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே.

2019 தேர்தலின் போது ரூபாய் 325 கோடிக்கும் அதிகமான தொகையை கட்சி சார்பாக தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையத்தளம் மற்றும் பிற வகையில் விளம்பரம் செய்ய செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு சமர்ப்பித்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்கும் விதமாக செயல்படுவதாகவும் இந்திய மக்கள் பற்றிய தரவுகளை சீன ராணுவத்துடன் பகிர்வதாகவும் குற்றம் சாட்டி தடை செய்யப்பட்ட 59 செயலிகளில் ஷேர் இட், யு.சி. பிரௌசர், டென்-சென்ட் ஆகிய செயலிகளை தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக பா.ஜ.க. ஒப்பந்தம் செய்திருந்தது அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதில், இணையத்தளம் வாயிலாக விளம்பரம் செய்ய சீன நிறுவனங்களான அலிபாபா நிறுவனத்திற்கு சொந்தமான யு.சி. பிரௌசர், காமா கானா, டென்சென்ட் ஆகிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான பணம் வழங்கியதாக கணக்கு தாக்கல் செய்திருக்கிறது.

உலக மக்களின் உழைப்பையும் வளங்களையும் சுரண்டும் சீன அரசின் கைக்கூலியாக செயல்படும் இந்த நிறுவனங்களுடன் பா.ஜ.க. ஒப்பந்தம் செய்ந்திருந்த காரணத்தால் தான் சீனா குறித்து பிரதமர் வாய் திறக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்காகவே சீனாவுடன் மோதல் போக்கு கடைபிடிக்கப்படுவதாகவும், ஆனால் இதே சீன நிறுவனங்கள் தான் டிரம்பின் வெற்றிக்காக உழைத்து வருவதாகவும் அமெரிக்க அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், டிரம்பின் அருமை நண்பர் நரேந்திர மோடி தலைமையில் செயல்படும் பா.ஜ.க. அரசு 2019 தேர்தல் வெற்றிக்கு சீன நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.