டில்லி
உணவுப் பொருட்கள் விலை குறைவதால் விவசாயிகள் வருமானம் குறைந்து வருகிறது.
உணவு பொருட்களின் விலைகள் தற்போது பெருமளவில் குறைந்துள்ளது. தானியங்கள் உள்ளிட்டவைகளின் விலைகள் குறைந்துள்ளதற்கு பாஜக அரசு தாங்களே காரணம் என கூறி வருகிறது. குறிப்பாக கடந்த 2018-19 வருட்டத்தில் 2012-13 க்கு பிறகு பெருமளவில் விலை குறைந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைவதாக அரசு கூறி வந்தாலும் இது மகிழத்தக்கது அல்ல என பல பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாஜக உணவுப் பொருட்கள் விலை குறைப்பை சாதனையாக கூறி வருகின்றது. இந்த அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவின் மூலம் பொருளாதார வளர்ச்சி உண்டாகி அதனால் பணவீக்கம் பெருமளவில் குறையும் என பாஜக கூறி வருகிறது.
கடந்த ஒரு வருடமாக உணவுப் பொருட்கள் விலை ஏறாமல் உள்ளது. ஆனால் காய்கறிகளில் விலை ஓரளவே உயர்ந்துள்ளது. இந்த விலைக் குறைப்புக்கு முக்கிய காரணம் உணவுப் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சியாகும். அதாவது விவசாய தொழிலில் அதிக உற்பத்தி ஏற்பட்டுள்ளது.
அதிக உற்பத்திக்கு அதிக முதலீடு தேவை என்பதும் அந்த முதலீடுக்கு ஏற்ப விலை இருந்தால் மட்டுமே உற்பத்தியாளருக்கு லாபம் என்பது அனைத்து வர்த்தகத்தின் அடிப்படையாகும். தற்போது உணவுப் பொருட்கள் மொத்த சந்தையிலும் கடுமையாக விலைகள் குறைந்துள்ள்ன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே விவசாயிகளுக்கு போதுமான அளவு விலை கிடைக்கவில்லை என்பதே இதில் மறைந்துள்ள உண்மையாகும். நாட்டில் உள்ள விவசாயிகள் பாஜக அரசு மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். தங்கள் விளைபொருளுக்கு ஏற்ற விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்னும் நெடுநாளைய கோரிக்கையை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.
இந்த மக்களவை தேர்தலில் விவசாயிகள் பாஜகவுக்கு நாடெங்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே பாஜக அரசு ஒரு புறம் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதாக சொல்லி வந்தாலும் விவசாயிகளின் எதிர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில் அது எதிரொலிக்கும் என கவலையுடன் பாஜக இருந்து வருகிறது.