ஜோத்பூர்:

சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவிப்பதில் புகழ் பெற்றவர் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். இவர் தற்போது ஜோத்பூர் வந்திருந்தார். அங்கு அரசியல் வட்டாரத்தில் சூட்டை ஏற்படுத்தும்ம் வகையில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

அங்கு அவர் ராமர் கோவில் குறித்து பேசுகையில், ‘‘இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் ராமரின் பிள்ளைகள் தான். பாபரின் பிள்ளைகள் அல்ல. ராமர் கோவிலை இந்தியாவில் கண்டிப்பாக கட்டியே தீருவோம். இஸ்லாமிய சகோதரர்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்துக்களின் முன்னோருக்கு கோவில் கட்டுவதில் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் இருக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கோடி கணக்கான இந்துக்கள் நம்பிக்கை கொண்டுள்ள ராமருக்கு இந்தியாவில் கோவில் கட்டாமல், பாகிஸ்தானிலா கட்ட முடியும்’’ என்றார்.

முன்னதாக இவர் பத்மாவதி திரைப்படம் குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘திரைப்பட துறையினர் ஏன் தொடர்ந்து இந்து சமுதாயத்தை மட்டும் குறிவைக்கின்றனர்?. கோடி கணக்கான மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் ஏன் பத்மாவதி திரைப்படத்தை தயாரிக்க வேண்டும்?.

இதர சமுதாயம் குறித்து இத்தகைய திரைப்படம் தயாரிக்க அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா?. இந்துக்கள் எப்போதும் தாராளமயமானவர்கள். அதனால் தான் இந்த சமுதாயம் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது’’ என்று தெரிவித்திருந்தார்.