புதுடெல்லி: பாரதீய ஜனதாவின் மத அரசியல் டெல்லியில் பலிக்காது என்று தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது, “சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ளது. நாம் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம்.

வெற்றிக்காக நாம் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். நமது இலக்கு மிகப் பெரியது. கடந்தமுறை 67 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது போன்று இந்தமுறையும் வெற்றியை உறுதிசெய்ய வேண்டும்.

பிற கட்சிகளில் இருந்து வந்தவர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து, வெற்றிக்காக கடுமையாகப் பாடுபட வேண்டும். பாரதீய ஜனதாவின் மதவாத உத்தி டெல்லியில் எடுபடாது.

கடந்த 5 ஆண்டுகளில் நாம் செய்த பணிகளைச் சொல்லி மக்களை சந்திப்போம். மக்கள் நமக்கு நிச்சயம் ஆதரவு தருவார்கள். சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை இப்போதே துவக்குவோம்” என்றார்.