கவுகாத்தி:
அசாம் வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து, மோடியே திரும்பிப் போ என கோஷமிட்டனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நிறைவேற்றியுள்ளது. ராஜ்யசபையில் இன்னும் நிறைவேற்றவில்லை.

இந்நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்கள் நேரிடையாக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், 2 நாள் சுற்றுப்பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கவுகாத்தியில் கருப்புக் கொடி காட்டிய அனைத்து அசாம் மாணவர் சங்கத்தினர், மோடியே திரும்பிப் போ என கோஷமிட்டனர்.

கவுகாத்தியில் ராஜ்பவனை நோக்கி அவர் காரில் சென்றபோது, கவுகாத்தி பல்கலைக்கழக வாயிலில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் மோடிக்கு கருப்புக் கொடி காட்டினர்.

மேலும் குடியுரிமைச் சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

காரில் இருந்தவாறு பார்த்துக் கொண்டே பிரதமர் மோடி சென்றார்.