டாக்கா

ங்க தேச அரசு, ரோஹிங்கியா அகதிகளுக்காக 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கும்படி உலகின் மிகப் பெரிய அகதிகள் முகாம் அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மீது ராணுவமும், புத்த மத தீவிரவாதிகளும் தாக்குதல் நிகழ்த்தியதையொட்டி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் வங்க தேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.  அவர்கள் எல்லைப் பகுதியில் ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  அரசும் தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கு உதவி வருகின்றன.

ஏற்கனவே வங்க தேசத்தில் 3 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் உள்ளனர். தற்போது மேலும் அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர்.  மொத்த அகதிகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி விட்டது.   இவர்கள் எல்லையில் உள்ள குட்டபலாங் கேம்ப் என்னும் இடத்தில் 23 முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்படுள்ளனர்.

அவர்களுக்காக வங்க அரசு சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பெரிய முகாம் ஒன்றை அமைத்துக் கொண்டு உள்ளது.   தற்போது சிறிது சிறிதாக அகதிகள் இந்த முகாமுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.  இந்த முகாம் முழுவதும் அமைக்கப்பட்ட பின்பு உலகின் மிகப் பெரிய அகதிகள் முகாமாக இது விளங்கும்.   மொத்தம் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கும் படி இந்த முகாம் அமையும்.   இந்த முகாம் முழுமையாக அமைக்கப்பட்ட பின் தற்போதுள்ள சிறு சிறு முகாம்கள் மூடப்படும்

இந்தத் தகவலை வங்க அரசு நேற்று அறிவித்துள்ளது.   வங்க அரசின் இந்த சேவைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.