சென்னை பிப் 8

காணாமல் போன பெண் குழந்தை மாங்காடு அருகே எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிறன்று மாங்காட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஹாசினி என்ற ஏழுவயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது வெளியே சென்றிருந்த அவளது பெற்றோர் வந்து பார்த்தபோது குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் குழந்தை கிடைக்காததால் போலீசாரிடம் அவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்புக் கேமராவை பரிசோதித்துப் பார்த்தனர். அதில் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் காணாமல்போன குழந்தையின் வீட்டுக்கருகே உள்ள கல்லூரி மாணவர் ஜஸ்வந்திடம் போலீசார் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

தீவிரவிசாரணைக்குப் பின் குழந்தையை தான் கடத்தியதாக அந்த வாலிபர் ஒப்புக்கொண்டார். பணத்திற்காக குழந்தையை கடத்தியதாகவும், அப்போது அவள் சத்தம்போட்டதால் துணியால் வாயை அடைத்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறினார்.

மேலும் உயிரிழந்த குழந்தையின் உடலை தூக்கிச் சென்று புதருக்கு அருகில் வைத்து எரித்த தாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்துப் போலீசார் எரிக்கப்பட்ட நிலையில் இருந்த குழந்தையின் உடலை போலீசார் நேற்றிரவு கைப்பற்றினர்.

கொலைகாரனை போலீசார் கைதுசெய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.