டில்லி

போயிங், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் மற்றும் மகிந்திரா நிறுவனங்கள் இணைந்து போர் விமானங்கள் தயாரிக்க ஒப்பந்தம் இட்டுள்ளன.

இந்தியாவில் அனைத்து பொருட்களும் தயாரிக்கப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கைகளில் ஒன்றாகும்.   இதற்காக ‘மேக் இன் இந்தியா’ என திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது.   அரசு இது போல இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களுக்கு தனது கொள் முதலில் முதல் இடம் அளிக்கும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் போயிங், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் மற்றும் மகிந்திரா நிறுவனங்கள் இணைந்து ஒரு ஒப்பந்தம் இட்டுள்ளன.   அதன்படி போர் விமானங்கள் உட்பட பல ராணுவத் தளவாடங்களை இவைகள் அளிக்க உள்ளதாகவும் அத்துடன் இதற்காக இந்திய ராணுவத்திடம் இருந்து வாய்ப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளன.    இந்த மூன்று நிறுவனங்களில் மகிந்திரா ஒரு தனியார் நிறுவனம் ஆகும்.

இந்த கூட்டு நிறுவனத்துக்கு இந்திய கடற்படையில் இருந்து 57 போர் விமானங்களும், விமானப் படையில் இருந்து   110 போர் விமானங்களும் தேவை என விலைப்புள்ளி கேட்கப்பட்டுள்ளது.  நிறுவனம் அளிக்கும் விலையை ஒப்புக் கொண்டால் இந்த நிறுவனம் விரைவில் தனது போர் விமான உற்பத்தியை தொடங்கும் என கூறப்படுகிறது.