மும்பை :

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் ஆர்எஸ்பி கட்சியில் சேர உள்ளதாக, மகாராஷ்டிரா மாநில அமைச்சர் தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த  ஆளும் கட்சி கூட்டணியில் ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா ( Rashtriya Samaj Paksha (RSP) கட்சியும் இணைந்துள்ளது.

இந்த கட்சியைச் சேர்ந்த பங்கஜ் முண்டே மாநில அரசில் அமைச்சராக உள்ளார். இந்த நிலையில், ஆர்எஸ்பி கட்சியின் 16வது நிறுவனர் தின விழா செப்டம்பர் 25ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில்,   அமைச்சர் பங்கஜ் முண்டே முன்னிலையில் பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சஞ்சய்தத், 1993ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு பயங்கரவாதிகளுக்கு உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருந்தார். புனேவில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், நன்னடத்தை காரணமாக மாநில அரசின் சிபாரிசின் பேரில்,  8 மாதங்கள் முன்னதாகவே விடுதலை செய்யப்பட்டார். தற்போது சில படங்களில் நடித்து வரும் சஞ்சய் தத் விரைவில் அரசியலில் குதிக்க உள்ளார்.