சென்னை: சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம். நாள்தோறும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களும், தொண்டர்களும், வந்து செல்வர்.

இந் நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் வெடித்து விடும் என்று கூறி மிரட்டில் விடுத்திருக்கிறார்.

இதையடுத்து, போலீசார் உடனடியாக அண்ணா அறிவாலயம் விரைந்தனர். பிறகு, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தீவிர சோதனை நடத்தினர்.

ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.  தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்தும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.