பெங்களூரு:

கர்நாடகா சட்டமன்றத்தில் நாளை எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்காக தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையாவை கவர்னர் நியமித்துள்ளார்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான இவர் 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சபாநாயகராக இருந்தவர். 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

2011ம் ஆண்டு எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தார் போப்பையா. தகுதி நீக்கத்தை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் இதை ரத்து செய்தது.

எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் வகையில் எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்கள் 16 பேரை அவசர அவசரமாக தகுதிநீக்கம் செய்ததாக போப்பையாவை உச்சநீதிமன்றம் கண்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.