பிரிட்டனின்  பிரதராக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

பிரதமர் பதவிக்கு போரிஸ் ஜான்சன், ஜெரிமி ஹன்ட் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், போரிஸ் ஜான்சன் வெற்றிபெற்று  இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

போரிஸ் ஜான்சன்

பிரிட்டன்  பிரதமரைத் தேர்வு செய்வதற்கான இறுதிக்கட்ட தேர்தல், நேற்று மாலை நிறை வடைந்தது. அதையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதில் (பிரெக்ஸிட்) இழுபறி நீடித்து வருவதன் எதிரொலியாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் தெரசா மே கடந்த மே மாதம் அறிவித்தார்.

இதையடுத்து பிரதமர் பதவிக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. கன்சர்வேடிவ் கட்சியின் 10 எம்.பி.க்கள் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தனர். பல சுற்று வாக்கெடுப்புக்குப் பிறகு பிரதமர் பதவிக்கான தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியது. போனிஸ் ஜான்சன், ஜெரிமி ஹன்ட் இடையே மோதல் நீடித்து வந்தது.  இதில் வெற்றி பெறுபவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் அறிவிக்கப்படுவார்

இந்த நிலையில், நேற்று மாலையுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. இதில்,  1,60,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்குகளைச் செலுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெயியாகின.

இந்த நிலையில், போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். போரிஸ் ஜான்சன் ஏற்கனவே வெளியுறவு அமைச்சராக பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.