புதுடெல்லி: இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்து வாங்கும் உலகின் முதல் நாடாக மாறவுள்ளது பிரேசில்.

பிரேசிலுக்கான 2 மில்லியன் டோஸ்கள், அடுத்த வாரம், மும்பையிலிருந்து சிறப்பு விமானத்தில் ரியோடிஜெனிராவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பிரேசில் அரசாங்கத்திற்கும், இந்தியாவின் புனேவிலுள்ள சீரம் மருந்துகள் உற்பத்தி நிறுவனத்திற்கும், தடுப்பு மருந்து வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, அதன்விளைவாக, பிர‍ேசிலுக்கு, சிறப்பு விலையில் தடுப்பு மருந்துகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

சீரம் நிறுவனமானது, அஸ்ட்ராஸெனகா – ஆக்ஸ்போர்டு இணைந்து தயாரித்த தடுப்பு மருந்தை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், இந்திய மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் துவங்கப்பட்ட பிறகுதான், பிரேசிலுக்கான மருந்து அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டிலேயே 100 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்தை தயாரிக்க பிரேசில் அரசு திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தையை பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்துடன் நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.