டில்லி

ரும் 2020 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகள் கொண்ட அமைப்பின் உச்சி மாநாடு,  நடக்கிறது.  இந்த மாநாட்டில் அறிவியல், தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும், தீவிரவாதத்துக்கு எதிரான கூட்டு ஒத்துழைப்பு அளிப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாகப் பிரதமர் மோடி பிரேசில் சென்றுள்ளார்.

அவருக்கு பிரேசிலியா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்த மாநாட்டின் ஒரு பகுதியாகப் பிரதமர் மோடி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவை சந்தித்துப் பேசினார்.  இரு தலைவர்களும் இச்சந்திப்பில்  பன்முகத்தன்மையுடன் கூடிய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; இரு தலைவர்களும், இரு தரப்பு உறவு குறித்து நடத்திய ஆலோசனை பயனுள்ளதாக இருந்தது எனக் கூறப்பட்டுள்ளது

இந்நிலையில் அடுத்த ஆண்டு (2020) நடைபெறும் இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வருமாறு பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.   பிரேசில் அதிபர் மகிழ்ச்சியுடன் இந்த அழைப்பை  ஏற்றுக்கொண்டார். அதைப் போல், பிரேசில் வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அந்நாட்டு அதிபரின் அறிவிப்புக்குப் பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.