ரியோ டி ஜெனீரோ: பிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிரேசிலில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அந்நாட்டு அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ அலட்சியம் காட்டியதாக விமா்சனங்கள் எழுந்தன. பல நாடுகள் லாக்டவுனை அறிவித்த நிலையில், பிரேசிலில் லாக்டவுனை அறிவிக்க அதிபர் முன்வரவில்லை.

இந்நிலையில் அந்நாட்டின் மனாஸ் நகரில் கொரோனா சிகிச்சைக்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லாதது, தடுப்பூசி முகாம்களை தொடங்குவதில் தாமதம் என மீண்டும் அவா் மீது விமா்சனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, மக்கள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ரியோ டி ஜெனீரோ, சாவ் பாலோ நகரங்களில் மக்களின் கார்களில் அணிவகுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கார்களில் ஒலி எழுப்பியவாறு அவர்கள் சென்றனர்.