லண்டன்:

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாததால், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பதவியை ராஜினாமா செய்தார்.


ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கை தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் பெரும்பான்மை மக்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து, 2019 மார்ச் 29-ம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து முறைப்படி விலக முடிவானது.

இந்நிலையில், பிரெக்ஸிட்டை எதிர்த்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியதையடுத்து, தெரசா மே புதிய பிரதமரானார். பதவியேற்றதும் பிரெக்ஸிட் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார்.

இந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எதிர்கட்சி மட்டுமல்லாது,தெரஸா மேயின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால், பிரெக்ஸிட் ஒப்பந்தம் 3 முறை தோல்வியடைந்தது.

இதனால், ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு, தெரசா மேயின் வேண்டுகோளுக்கிணங்க அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

பிரெக்ஸிட் விவகாரத்தில் எம்பிக்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் பதவியையும், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியையும் வெள்ளிக்கிழமையன்று தெரசா மே ராஜினாமா செய்தார்.

எனினும், புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை, தெரசா மே பதவியில் தொடருவார். இந்நிலையில், முன்னாள் வெளியுறுவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்ஸன் அடுத்த பிரதமராக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.