மதுரை: விவசாயிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை காட்டமாக கூறியுள்ளது.

விவசாயிகளிடம் நெல் கொல்முதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் பெறுவது தொடர்பாக வழக்கறிஞர் சூர்யா பிரகாஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மனுவில், தமிழகம் முழுவதும் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்ய போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும், விவசாயிகளிடம் இருந்து விரைவாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், மேலும்  விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டையை வாங்க அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை தடை செய்ய வேண்டும், மூட் டை  ஒன்றுக்கு ரூ.40 லஞ்சமாக அதிகாரிகள் வாங்குவதாகவும், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளது ? என்றும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது குறித்தும் , தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் நாளை பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்ததுடன்,  விவசாயிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று கருத்து தெரிவித்தத,  வழக்கினை ஒத்திவைத்தனர்.