மதுரை :

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 5ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில், செங்கல்லால் கட்டப்பட்ட சிறிய அளவிலான தண்ணீர் தொடங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மதுரையிலிருந்து 12கிமீ தொலைவில்  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள் ளது கீழடி எனும் ஊர். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஊரில்  தமிழர்களின் ஆதிகால வாழ்க்கையைப் பற்றி இந்த காலத்துக்கு எடுத்துரைக்கும் வகையில் ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக கடந்த   2015ம் ஆண்டு முதல் தொல்பொருள் துறை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். அங்கு பூமிக்கு அடியில் இருந்து  கிடைக்கும் பல்வேறு பொருட்கள், கட்டிடங்கள் போன்றவை  இந்தியாவில் வேறெங்கும் கிடைக்காத வகையில் உள்ளன.

இங்கு கிடைக்கப்பெற்ற 6000த்துக்கும் அதிகமான தொல்லியல் பொருள்களில் நிறைய ஓடுகளும் அடக்கம். அவற்றில் பாரசீக மொழியில் எழுதப்பட்ட சொற்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள நீர் வடிகால் அமைப்பு, தொழிற்கூடங்கள் செய்யப்பட்ட தற்கான அடையாளங்கள் ஆகியன இங்கு காணப்படுகிறது.

இங்கு கிடைத்த அரிய வகை பொருள்களின் பழமை கிட்டத்தட்ட 2300 ஆண்டுகள் இருக்கும் என்றும், அதாவது கிமு 2ம் நூற்றாண்டிலேயே பல வசதிகளோடு நகரக் கட்டமைப்பில் அங்குள்ள மக்கள் வாழ்ந்து இருப்பபதற்கான சான்று என்று  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் ஆராச்சி நடத்த மத்தியஅரசு அவ்வப்போது முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், தமிழக மக்களின் கோரிக்கை மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவைத் தொடர்ந்து, தற்போது அங்கு  5வது  கட்ட அகழாய்வு நடைபெறுகிறது.

இதில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஆய்வு செய்தபோது,  அழகிய செங்கல் கட்டுமானங்கள் கிடைத்து வந்த நிலையில்  சிறிய தொட்டி போன்ற அமைப்புடன் கூடிய கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது

3 அடி அகலமும், 5 அடி நீளமும் நான்கு அடி ஆழமும் கொண்ட முழுமையான கட்டுமானமாக இது கிடைத்துள்ளது. தரை தளத்திலும் செங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்தும் ஒரே அளவிலான செங்கற்கள் என்று ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். இந்த தொட்டியின் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.