இன்னொரு பெண்ணால் புயல்.. தீக்குளித்த புது மணமகள்…

திருச்சி, எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் 25 வயதான விஷ்ணு.  கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.  இவருக்கும் 19 வயது நீலவேணிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. இவர் விஷ்ணுவின் முறைப்பெண் ஆவார்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு திருச்சி ஏர்போர்ட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விஷ்ணு வீட்டுக்கு வந்திருந்தார்.  அவர் நீலவேணியிடம், ‘விஷ்ணுவுக்கும் எனக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது.  அதனால் இனி நான் உங்களுடன்தான் தங்கப் போகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

இதை கேட்டு அதிர்ந்த நீலவேணி, பெற்றோரிடமும், உறவினர்களிடமும் இதைப் பற்றிக் கூறியுள்ளார்.  அவர்களும் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஆனால் அது உண்மை தானா என அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

ஆனால் நீலவேணியோ கணவர் தன்னை ஏமாற்றி விட்டாரே என மிகுந்த மன வருத்தத்தில் இருந்திருக்கிறார்.  நேற்று முன்தினம் முழுவதும் அழுது கொண்டே இருந்திருந்திருக்கிறார்.  உறவினா்கள் அவரைத் தேற்றி சமாதானம் செய்து தூங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த  நீலவேணி விடியற்காலை தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.  அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று தீயை அணைத்து அவரை மீட்க முயன்றனர்.  ஆனால் நீலவேணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து எடமலைப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  திருமணம் ஆகி ஒரு வருஷத்துக்குள் பெண் இறந்ததால், இதுகுறித்து ஆர்டிஓ தனி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

– லெட்சுமி பிரியா