திருமணம் முடிந்த சில நிமிடங்களில் தாலியை கழட்டி வீசியதோடு, கணவரையும் கண்ணத்தில் மணமகள் அறைந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜி. அவருக்கு ராசிபுரம் ஆயில்பட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு, சோமேஸ்வரர் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் நேற்று திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் மணமகளுக்கு விஜி தாலி கட்டியுள்ளார். பின்னர் அவரது நெற்றியில் பொட்டும் வைத்துள்ளார். அப்பொழுது யாரும் சிறிதும் எதிர்பார்க்காத நிலையில் மணமகள் விஜியின் கையை தட்டிவிட்டு விட்டு, அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருமணம் செய்து வைத்த அர்ச்சகரையும் மணமகள் அடித்துள்ளார். இதனால் மணமகன் மற்றும் அங்கு கூடியிருந்த அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து தாலியை கழற்றி வீசி விட்டு மணமகள் அங்கிருந்து சென்றுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையில் மணமகன் வீட்டார் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் பெண்ணுக்கு மனநிலை சரியில்லை என்பதும், அவருக்கு திருமணத்தில் துளி அளவும் விருப்பமில்லை என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இரு குடும்பத்தாரையும் காவல்துறையினர் சமரசம் செய்துவைத்தனர்.

விஜிக்கு அவரது உறவுக்கார பெண் ஒருவருடன் திருமணமும் செய்து வைக்க அவரது உறவினர்கள் முடிவு செய்த நிலையில், காவல்துறையினரின் பாதுகாப்புடன் அத்திருமணம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.