(கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவு)
பிரிட்டிஷ் பிரதமராக மார்கரட் தாட்சருக்கு பிறகு தெரேசா மே பெண் பிரதமராகியிருக்கிறார். இந்தப் படத்தில் புடவை கட்டி இந்திய கலாச்சாரத்தோடு தான் பதவியேற்ற ஜூலை 13, 2016 அன்று பதவியேற்றார். லண்டன் சென்றபொழுது அன்றைக்கு உள்துறை அமைச்சர் (அங்கு செயலாளர் என்று அழைப்பார்கள்) ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் சந்தித்தது உண்டு.
a
இவர் ஆக்ஸ்போர்டில் படிக்கும்பொழுது, இவரது தோழியாக பெனாசீர் பூட்டோ விளங்கினார். 1976ல் பெனாசீர் பூட்டோ இவரது கணவர் பிலிப்பை இவருக்கு அறிமுகம் செய்து வைத்ததிலிருந்து காதல் கொண்டனர். விதவிதமான ஹை ஹீல்ஸ் காலணிகள் அணியக் கூடியவர். இவர் அணியக்கூடிய காலணிகளின் நிறுவனங்களுக்கு இவரே விளம்பரமாக ஆகிவிடுகிறார். இவருக்கு டைப் 1 நீரிழிவு நோய். 59 வயது ஆகின்றது.
எடுக்கின்ற நடவடிக்கையில் தீர்மானமாகவும், பிடிவாதமாகவும் சாதிக்கக் கூடியவர். டேவிட் கேமரூன் ஆதரவாளராக இருந்தாலும் பிரெஸிக்ட் (Brexit)ல் பட்டும் படாமலும் இருந்தார். வெளிநாட்டவர்களின் பிரஜா உரிமையில் மிகவும் கண்டிப்போடு உள்துறை அமைச்சராக இருந்தபோது செயல்பட்டார். 1997ல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்கரட் தாட்சரைப் போன்று சில மேனரிசங்கள் இவரிடம் உண்டு. இவருடைய தந்தையார் மதபோதகர். இவருடைய ஆடைகள் உடுத்தும் முறை நேர்த்தியாகவும், எளிமையாகவும் இருக்கும்.
ஐரோப்பிய யூனியன் பிரச்சினையில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் 27 உடன் நல்ல சுமூகமான உறவை மேற்கொள்ள வேண்டும் என்று குழுவை அமைத்து 2017ல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் கடமைகளையும் முறைப்படுத்தியுள்ளார். எப்படி நார்வே ஐரோப்பிய ஒன்றியத்தோடு வெளியிலிருந்து இயங்குகின்றதோ, அதைப் போல பிரிட்டனும் தன் கடமைகளை ஆற்றும் என்று பிரிட்டிஷ் அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவருக்கு மற்றொரு பிரச்சினை எதிர்கொள்ளவேண்டிய நிலை. அது ஸ்காட்லாந்து தனி நாடாக பிரிந்து செல்லவேண்டும் என்ற முணுமுணுப்புகள். லிபியா பிரச்சினை, டோனி பிளேர் காலத்தில் ஈராக்கில் நடந்துகொண்ட விதம், பிரிட்டன் பொருளாதாரத்தை சீராக்குதல் என பல சிக்கல்களுக்கு இவர் தீர்வு கண்டாகவேண்டும். இந்தியர்கள் மீதும், ஈழத் தமிழர்கள் மீதும் டேவிட் கேமரூன் காட்டிய பரிவும், பாசமும் இவரிடமும் எதிர்பார்க்கலாமா என்பது தெரியவில்லை. ஆனால் பதவியேற்ற அன்று இந்தியக் கலாச்சாரத்தை மதித்துள்ளார் என்பதின் மூலம் இந்தியர்களையும், ஈழத் தமிழர்களையும் பாதுகாப்பார் என்று ஒரு நம்பிக்கை.