டில்லி:

தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்  தொடர்ந்து பல்வேறு புதிய சலுகையை அறிவித்து வருகிறது. அதன்படி, தற்போது நாடு முழுவதும்  ஹாட் ஸ்பாட் மூலம்  வைஃபை சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில் குறைந்த பட்சமாக ரூ.19க்கு 2 ஜிபி டேட்டாவுடன் 2 நாட்கள் வாலிடிட்டியும் அளிக்கிறது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில், அரசு நிறுவன மான பிஎஸ்என்எல் நிறுவனமும் பல்வேறு வகையில் சலுகைகளை வாரி வழங்கி வாடிக்கை யாளர்களை தன்பக்கம் இழுத்து வருகிறது. நாடு முழுவதும் 4ஜி வழங்கி வரும் பிஎஸ்என்எல்  தற்போது ஹாட்ஸ்பாட் மூலம் 4ஜி வைஃபை சேவையை வழங்குவதாக அறிவித்து உள்ளது.

ஏற்கனவே, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்  மனோஜ் சின்ஹா 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் 1 மில்லியனுக்கும் அதிகமான வைஃபை ஹாட் ஸ்பாட்டுகளை அமைக்கப்படும் என்றும், சிலமுன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் உள்ள 16,367 நகரங்களில் 30,419 ஹாட் ஸ்பாட் சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இதன்மூலம் வாடிக்கையாளர்கள் ஹாட்ஸ்பாட் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ள பிஎஸ்என்எல், அதற்கான 4 வகையான  டேரிஃபையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

குறைந்த பட்சமாக ரூ.19 ரூபாய்க்கு  2 நாட்கள் வாலிடிட்டியுடன்  2 ஜிபி டேட்டா வழங்குகிறது.

இரண்டாவதாக,  7 நாட்கள் வாலிடிட்டியுடன் 7 ஜிபி டேட்டா உபயோகப்படுத்தும் பிளான் ரூ.39 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

3வதாக  15 நாட்கள் வாலிடிட்டி, 15 ஜிபி டேட்டா உள்ள பிளான் 59 ரூபாய்  என்றும்,

4வதாக, 28 நாட்கள் வாலிடிட்டியுடன் ரூ.69 ரூபாய் பிளானில் 30 ஜிபி டேட்டா  வழங்குவதாகவும் அறிவித்து உள்ளது.

வைஃபை ஹாட்ஸ்பாட், தமிழகத்தில், ரூ.8 கோடி செலவில் 93 இடங்களில்  அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னை நகரில் திருவல்லிக்கேணி, அண்ணாநகர், வில்லிவாக்கம், பெரம்பூர், மதுரவாயல், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 63 இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட 30 இடங்களிலும் மற்ற ஹாட் ஸ்பாட்கள் தமிழகத்தில் உள்ள மற்ற நகரங்களிலும் அமைக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே  பிஎஸ்என்எல் வைஃபை சேவையை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி பிற தொலைபேசி நிறுவனங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் பயன்படுத்தலாம் என்று அறிவித்து உள்ளது.