டெல்லி,

பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்ல், எம்டிஎன்எல்  நிறுவனங்களில் மத்தியஅரசு விருப்ப ஓய்வை அமல்படுத்தி உள்ள நிலையில், இதுவரை 79 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு மனு கொடுத்திருப்பதாக  மத்தியஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.

தனியார் தொலைத்தொடர்புகளின் போட்டியை சமாளிக்க முடியாத அரசு பொத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்., எம்டிஎன்எல் நிறுவனங்கள் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி, ஊதியத்திற்கே வழியின்றி தடுமாறி வருகின்றன.

இதையடுத்து, அந்த நிறுவனங்களில் சில சொத்துக்களை விற்பனை செய்ய முன்வந்துள்ள மத்திய அரசு, அதில் வேலை செய்யும் பணியாளர்களையும் குறைக்கும் நோக்கில், விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்து உள்ளது.

அதன்படி ஏராளமானோர் விருப்ப ஓய்வுக்கு மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது,

பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் இந்தியாவின் முக்கியமான சொத்துக்கள் ஆகும். நிலநடுக்கம், புயல் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின் போது நாட்டின் குடிமக்களுக்கு அவர்கள் தீவிரமாக உதவி செய்கின்றனர். எனவே இந்த நிறுவனங்களை புதுப்பிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவற்றை புதுப்பித்து தொழில்முறை நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பி.எஸ்.என்.எல். துறையை ஒப்பிடும்போது, அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கான செலவு அதிகமாக உள்ளது. குறிப்பாக பி.எஸ்.என்.எல்.லில் ஊழியர் செலவு 75.06 சதவீதமாகவும், எம்.டி.என்.எல்.லில் ஊழியர் செலவுகள் 87.15 சதவீதமாகவும் உள்ளது.

எனவே இந்த செலவினத்தை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்த கடந்த அக்டோபர் 23-ந்தேதி நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 4-ந்தேதி முதல் தொடங்கப்பட்டு இருக்கும் இந்த திட்டம் வருகிற 3-ந்தேதி வரை அமலில் இருக்கும். இதில் தற்போது வரை பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 79 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

இவ்வாறு கூறி உள்ளார்.