மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், கட்டிட தொழிலாளியாக பணிபுரிகிறார். சம்பவத்தன்று மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் மட்டும் இருந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் 15, 12 வயதுடைய 2 பேர் அங்கு விளையாடி கொண்டிருந்தனர். 2 பேரையும் அலுவலகத்துக்கு அழைத்த சுரேஷ், பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் அவரிடம் இருந்து தப்பி தங்களுக்கு நேர்ந்த கொடுமையை தந்தையிடம் தெரிவித்தனர். அதற்குள் அலுவலகத்திற்குள் இருந்த சுரேஷ் அங்கிருந்து தப்பினார். சிறுமியின் தந்தை தனது ஆதரவாளர்களுடன் தனிச்சியத்திற்கு சென்றார். அங்கிருந்த சுரேசை காரில் கடத்தி சம்மட்டிபுரத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுமியின் தந்தை மற்றும் சிலர் சுரேசை கொடூரமாக தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.எஸ் காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேசை மீட்டனர். சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சிறுமிகளின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.