சென்னை: இலங்கையில் கரையை கடந்த ‘புரெவி’ புயல் தற்போது பாம்பனை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.  கன்னியாகுமரி-பாம்பன் இடையே இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவோ, நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையோ கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக  தேசிய பேரிடர் மீட்புக் குழுவிடன் தென்தமிழகம் தயார் நிலையில் இருந்து வருகிறது.

வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் புயல் இலங்கை திரிகோணமலைப்பகுதியில் கரையைக் கடந்த நிலையில்,  தற்போது பாம்பனை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.  பாம்பனில் இருந்து 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயலின் தாக்கத்தால் தென்மாவட்டங்கள் குறிப்பாக,  தூத்துக்குடி,திருச்சி,ராமேஸ்வரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.

அதனைத்தொடர்ந்து 3-ந்தேதி பிற்பகலில் பாம்பனை ஒட்டி வருவதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதனால், இன்று. பிற்பகலுக்கு மேல் தென் தமிழக கடலோர பகுதிகளை கடந்து  இன்று இரவு அல்லது 4-ந்தேதி அதிகாலையில் புரெவி புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடக்கும்போது,  மணிக்கு 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளது.  புயல் காரணமாக  நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்  இடி-மின்னலுடன் கூடிய அதி கனமழை நாளை (இன்று) பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். நாளை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் (இன்றும், நாளையும்) நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தென்கிழக்கு வங்க கடல், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசுவதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
புரெவி புயல் காரணமாக, தென்தமிழகத்தில் தேசிய மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். கடற்கரைப்பகுதி மக்களும் நிவாரண முகாம்களில் தக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.