மதுரை:

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல  வழக்கில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை செயலருக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த மாதம் 20ந்தேதி நள்ளிரவு திடீரென பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இதன் காரணமாக அடுத்த நாள் கோலை பேருந்தில் பயணிக்க சென்ற பெரும்பாலான பயணிகள் பேருந்து கட்டண உயர்வு காரணமாக  பேருந்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பேருந்து கட்ட உயர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். மாணவ மாணவிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டண உயர்வை எதிர்த்து கே.கே. ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

அதில்,போக்குவரத்து கழகத்தில் ஏற்பட்டுள்ள  ரூ 20,488 கோடி நஷ்டம் குறித்து  ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை யில் விசாரணை நடத்தவும், 22,509 பேருந்துகள் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துக் கழக பேருந்துகள் சரியான முறையில் பராமரிக்கப்படாததால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும்,  அதுவரை பேருந்து கட்டண உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு, மனு மீது மார்ச் 7ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை செயலருக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 7ந்தேதிக்கு ஒத்திவைத்தது.